Monday, August 1, 2011

மூன்று பிரிவு உணவு

ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் மூன்று பிரிவு உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லா உணவுகளையும் அதன் முதன்மையான செயல்பாட்டை அடிப்படையாக வைத்து மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அதாவது சக்தி தரும் உணவுகள், உடல் வளர்க்கும் உணவுகள், உடலைப் பாதுகாக்கும் உணவுகள்.
உணவானது ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க உணவில் இந்த மூன்று பிரிவுகளிலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு வகை உணவுகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் அடங்கிய உணவுகள் சக்தி தரும் உணவுகளாகும். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்கள் முழு தானியங்கள், முழு பருப்புகள், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள் போன்ற உணவுகளில் கிடைக்கும். சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் கிடைக்கும். கொழுப்புகளுக்கான ஆதாரம் தாவர எண்ணெய்கள், நெய், வெண்ணெய் ஆகும். கொழுப்பையும், எண்ணெய்களையும் மிதமான அளவில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உணவுப் பொருட்களில் அதிக அளவு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புரதங்கள் அதிகம் நிறைந்த பருப்புகள், முட்டை, சிக்கன், மீன், போன்ற விலங்கு உணவுகள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவை உடலை வளர்க்கும் உணவுகளாகும். இவை தசை அடுக்குகள், உறுப்புகள், திசுக்கள், போன்றவற்றை கட்டமைப்பதுடன் பழுதடைந்த திசுக்களை சீர் செய்ய உதவுகிறது. இவை உடல் நலிவுறுவதைத் தடுப்பதுடன் நமது எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்குகிறது. அதனால் புரதங்கள் வயதான காலத்திலும் தேவைப்படும் உணவாகிறது.
மினரல்கள், விட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள் உடலைப் பாதுகாக்கும் உணவுகள். இவை உடம்பை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதுடன் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்துகிறது.
இத்தகைய உணவுகள் ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கின்றன. சிதைவு நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன / விரைவில் வராமல் தாமதப்படுத்துகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் இத்தகைய பாதுகாக்கும் ஊட்டச்சத்துகளும், ஆன்டி ஆக்ஸிடண்ட்களும் அதிக அளவில் உள்ளன.
நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிலும் இந்த மூன்று வகை உணவுகளிலிருந்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகள் இருக்க வேண்டும். இதற்காகப் பல தரப்பட்ட பதார்த்தங்களைச் செய்தாக வேண்டும் என்பதில்லை. ஒரே ஒரு பதார்த்தத்தில் கூட இந்த மூன்று வகை உணவுகளையும் இடம் பெறச் செய்துவிடலாம் (உ.ம்) காய்கறிகள் நிறைந்த கிச்சடி, வெஜிடேபிள் உப்புமா மற்றும் மிஸ்ஸி ரொட்டி.

உடனடி சமையல் ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள் :

ரொட்டி உதிர்த்தது – 1
பச்சை பட்டாணி – 1 மேஜைக்கரண்டி
காரட் – 1 தீக்குச்சிகளாக வெட்டியது
பெல்லாரி – 1
தக்காளி – 1
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய மிளகாய் 2 உப்பு, மல்லித் தழை (நறுக்கியது)

செய்முறை:

வாணலியில் எண்ணெயை விட்டு தாளிதம் செய்யவும். நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கி சிறு தீயின் தன் தண்ணீரில் வேக விடவும். தேவையான உப்பை சிறிது நீரில் கலந்து ரொட்டித் துண்டுகளுடன் புட்டு மாவுக்கு விரவுவது போல் விரவி வாணலியில் கொட்டி காய்கறிகளுடன் ஒன்று சேரக் கிளறி மல்லித் தழையைத் தூவி கீழே இறக்கவும்.

தயிர் உருளை

பேபி பொட்டேடோஸ் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா..? தயிரோட சேர்ந்த உருளைகிழங்கு மசாலாவா.. சொல்லவே வேண்டாம் எக்ஸ்ட்ரா இரண்டு பூரியோ, சப்பாத்தியோ சொல்லாமலே உள்ளே போகும். ஒங்க வீட்டு குட்டீஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். செஞ்சு குடுங்க... அடம் பண்ணாம சாப்பிடுவாங்க!

தேவையான பொருட்கள்:

சிறிய உருளை கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
சற்று புளித்த தயிர் - 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.

* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.

* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.

* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.

தோசை

தேவையான பொருள்கள்:-
புழுங்கல் அரிசி – 1/2 லிட்டர்
பச்சரிசி – 1/2 லிட்டர்
உளுந்து – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கொஞ்சம்

செய்முறை:-
முதல் நாள் மாலையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஊற வைக்கவும்.
உப்புப் போட்டு, கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவும்.
அடுத்த நாள் காலை மாவு நன்றாகக் புளித்திருக்கும்.
மாவில் அளவாகத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, எண்ணெய் தோய்த்த ஒரு துணியினால் கல்லைத் துடைத்து விட்டு, ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி வட்டமாகப் பரப்பி விடுங்கள்.
ஒரு புறம் வெந்ததும், தோசைக் கரண்டியால் திருப்பிப் போட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை நன்றாக வெந்ததும், எடுத்துத் தட்டில் போடவும்.
சுடச் சுட சாம்பார் ஊற்றியோ, சட்னி தொட்டுக் கொண்டோ அல்லது இரண்டும் வைத்துக் கொண்டோ தோசையை ஆசையோடு சாப்பிடுங்கள்.

ரவா கேசரி

ரவா கேசரி அனைவருக்கும் தெரிந்த மிக எளிதில் செய்யக்கூடிய மிகவும் சுவையான இனிப்பு,விலையுயர்ந்த இனிப்புகள் எத்தனை வந்தாலும் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

தேவையான பொருட்கள் :

ரவா       -   100 கிராம்
சர்க்கரை   -   150 கிராம் (தேவைக்கு)
நெய்       -   50 கிராம் (தேவைக்கு)
முந்திரி    -   5
திராட்சை   -  5
ஏலக்காய்    – 5
கேசரி பவுடர் – தேவைக்கு
தண்ணிர்     – 3 டம்ளர்
செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும்
கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.  

விருப்பட்டால் : அண்ணாச்சி பழ துண்டுகள் , கறுப்பு திராட்சை பழம் நெய்யில் வதக்கி சேர்கலாம் .

பனீர் வெஜிடபிள் பிரியாணி

பனீரில் உள்ள புரதச்சத்து அனைத்து வயதினருக்கும் மிகவும் நல்லது. சுவையுள்ளதும் கூட. பன்னீரை விதவிதமாய் சமைத்து சாப்பிட்டிருப்போம்.. ஆனா, பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? செஞ்சு பாருங்க..சூப்பரா இருக்கும்! சுவையும் மணமும் நிறைந்துள்ளதால் சைவ விருந்தாளிகளுக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து கொடுத்த சந்தோஷம் நிலவும்...

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1

வறுத்து அரைக்க:

கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.

மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு

தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தூக்கி வீசப்படும் வெள்ளை துண்டுகளை வீணாக்காமல் கூட்டு செய்து குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் கலர்ஃபுல்லாக கொடுத்தால் சத்தமில்லாமல் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான கூட்டை சந்தோஷத்தோடும் பரிமாறுங்கள்...

தேவையானவை:

தர்ப்பூசணி துண்டுகள் (வெள்ளை பாகம்) - 2 கப்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 2 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 4 டீ ஸ்பூன்
கேரட் துண்டு, பட்டாணி (பச்சை) - 1/4 கப்

செய்முறை:

* பயத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்­ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.

* அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

* கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும்.

* கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

* தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

* இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.

குறிப்பு: தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

சிறந்த ஆரோக்கியம் பெறுவதற்கு

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வில்வ மரத்தின் வேர்
 பட்டையை தூள் செய்து குடித்துவர நீண்ட நாள் வாழலாம்.

குளுக்கோஸ் நேரடியாக உடலுக்குக்கிடைக்க தினமும் 2 பேரிச்சம்பழத்துடன்
 பால் குடிக்கலாம்.

ஆயுள் பெருக இஞ்சித்துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட
பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.

மனதை எப்போதும் நல்லெண்ணத்துடனும் கவலைகள் இல்லாதபடியும்
வைத்திருந்தால் என்றும் இளமையாக வாழலாம்.‌

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பாகற்காய்!

நமது உடலின் அத்தியாவசியமான உறுப்பாக இருக்கும் கணையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டால் உடலின் செயல்பாட்டில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். உணவை செரிக்க வைக்க உதவும் வினையூக்கிகளை சுரக்கும் கணையமானது, லாங்கர்ஹான் திட்டுகள் மூலம் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரந்து, ரத்த சர்க்கரையளவை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் சுரப்பு இல்லாவிட்டால் சர்க்கரைச்சத்து சக்தியாக பரிமாற்றமடையாமல் ரத்த சர்க்கரையளவு மிகுந்த சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக வெளியேறி, உடல் உருக்குலைய ஆரம்பிக்கும். இன்சுலின் பற்றாக்குறையால் உண்டாகும் டயாபட்டிஸ் மெலிட்டஸ் என்னும் சர்க்கரை நோய் மேல்தட்டு மக்களை 70 சதவீதம் அளவிலும், கீழ்த்தட்டு மக்களை 30 சதவீதம் அளவிலும் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பரம்பரையாக சர்க்கரைநோய் உள்ளவர்கள், பருத்த உடல் உடையவர்கள், கொழுத்த உணவுகளை உட்கொள்பவர்கள், காலந்தவறி உணவு உண்பவர்கள், மனக் கவலை மற்றும் மன அழுத்தம் உடையவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், உடல் உழைப்பின்மை மற்றும் நடைப்பயிற்சியற்றவர்கள் மற்றும் நாட்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளால் எளிதில் சர்க்கரை நோய்க்கு ஆளாகிறார்கள்.

குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதை குறைத்து, நாள் முழுவதையும் பள்ளியிலும், "டிவி"யிலும் கழிப்பதால் இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதனால் நாவை கட்டுப்படுத்த முடியாத குழந்தைகளும் விரைவிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். நாம் உண்ணும் உணவுகளிலே கசப்பு மற்றும் துவர்ப்புத் தன்மை கலந்துள்ள பொருட்களை இளமை காலத்திலிருந்தே உட்கொள்வதுடன், உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களை செய்து வந்தால் சர்க்கரை நோயின் தாக்கங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, இன்சுலினை சுரக்கச் செய்யும் உணவுப்பொருட்களில் முதன்மையானது பாகற்காய்.

மொமார்டிக்கா ஹியுமிலிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட குக்கூர்பிட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பாகல் கொடிகள் சாதாரணமாக வேலியோரங்களில் படர்ந்து, வளர்ந்து காணப்படுகின்றன. அனைத்து வகையான பாகற்காயிலும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கசப்புத் தன்மையுடைய வேதிச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

பழுக்காத காய்களிலுள்ள கசப்பான மொமார்டிக்கோசைடுகள், அமினோ அமிலங்கள், ஹைட்ராக்சிக்டிரிப்டமைன்கள், கரான்டின், டையோஸ்ஜெனின், லேனோஸ்டீரால், குக்கூர்பிட்டேசின் போன்ற கசப்பான சத்துக்கள் சர்க்கரை அளவை குறைக்கின்றன. இவை விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் இன்சுலினிற்கு இணையானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விதைகளிலுள்ள மொமார்டிக்கா ஆன்டி எச்.ஐ.வி. புரதங்கள் மற்றும் எம்.ஆர்.கே.29 புரதங்கள் எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளையும், கட்டிகளை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் உடையவை. காய் மற்றும் பழங்களிலுள்ள கிளைக்கோ புரதங்கள், மொமாச்சாரின் மற்றும் ஆல்பா மற்றும் பீட்டா மொமாச்சாரின் சர்க்கரை நோயின் பாதிப்பினால் உண்டாகும் அதிகப்படியான கொழுப்பினை கரைக்கின்றன. விதையிலுள்ள விசின் என்னும் பொருள், ரத்தத்தில் கலந்துள்ள அதிக சர்க்கரையை விரைவில் எரித்து, ரத்த சர்க்கரையளவை குறைப்பதாக பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இளங்காய் மற்றும் லேசாக பழுத்த பாகற்காய்களை எடுத்து, நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின் சிறு, சிறு துண்டுகளாக மைய வெட்டி, நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் அதே நீருடன் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து, பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை 60 முதல் 120 மிலி வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.

சித்த மருந்து உட்கொள்பவர்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டியுள்ளதால் பாகற்காய்க்கு பதிலாக பிஞ்சு பாகலை உட்கொள்ளலாம். இது பத்தியத்திற்கு ஏற்றதாகும். சர்க்கரை நோயாளிகள் ஏற்கனவே தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளுடன் பாகற்காய் கசாயம் அல்லது பாகற்காய் சாறை சேர்த்துக் கொள்ளலாம்.

வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ பாகற்காய் சாறு 10 முதல் 20 மில்லியளவு அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வர, கணையம் இன்சுலினை நன்று சுரக்க ஆரம்பிக்கும். நிலப்பாகல் அல்லது மிதிப்பாகலை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம்

ஊழலை ஒழிக்க கரம் கோர்ப்போம்...வாருங்கள்..Dr. APJ அப்துல்கலாம் அவர்களை இணையத்தில் தொடர்பு கொள்ளுங்கள் ..!!!!


ஊழலை ஒழிக்க கரம் கோர்ப்போம்...வாருங்கள்..
Dr. APJ அப்துல்கலாம் அவர்களை இணையத்தில் தொடர்பு கொள்ளுங்கள் ..!!!!


நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது; 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

இது, மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தக் கூடிய திட்டம். அறிவியல் தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் வளர்க்க, அறிவியல் கண்காட்சி அமைத்திருப்பது சிறப்பு. இதன் மூலம் இளம் விஞ்ஞானிகளை கண்டெடுத்து அவர்களது திறனை வெளிக்கொணர்வது, இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கும்.உங்கள் முயற்சி, ஒரு சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்து, தமிழகத்தை ஒரு வளமான நாடாக்கும் திட்டத்தில் முதல் மாவட்டமாக செயல்பட்டு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.

அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன். வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.

ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் www.abdulkalam.com தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.