Monday, August 1, 2011

மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு

தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தூக்கி வீசப்படும் வெள்ளை துண்டுகளை வீணாக்காமல் கூட்டு செய்து குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் கலர்ஃபுல்லாக கொடுத்தால் சத்தமில்லாமல் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான கூட்டை சந்தோஷத்தோடும் பரிமாறுங்கள்...

தேவையானவை:

தர்ப்பூசணி துண்டுகள் (வெள்ளை பாகம்) - 2 கப்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 2 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 4 டீ ஸ்பூன்
கேரட் துண்டு, பட்டாணி (பச்சை) - 1/4 கப்

செய்முறை:

* பயத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்­ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.

* அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

* கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும்.

* கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

* தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

* இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.

குறிப்பு: தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

No comments: