Monday, August 1, 2011

பனீர் வெஜிடபிள் பிரியாணி

பனீரில் உள்ள புரதச்சத்து அனைத்து வயதினருக்கும் மிகவும் நல்லது. சுவையுள்ளதும் கூட. பன்னீரை விதவிதமாய் சமைத்து சாப்பிட்டிருப்போம்.. ஆனா, பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? செஞ்சு பாருங்க..சூப்பரா இருக்கும்! சுவையும் மணமும் நிறைந்துள்ளதால் சைவ விருந்தாளிகளுக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து கொடுத்த சந்தோஷம் நிலவும்...

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1

வறுத்து அரைக்க:

கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.

No comments: