Friday, August 12, 2011

ஷாகி பன்னீர்

பன்னீர் சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்கள் பால்சார்ந்த பொருட்களிலேயே மிக மிக சுவை வாய்ந்தவை. இப்படி பால் சார்ந்த பொருட்களுக்கு மகுடம் வைத்தாற்போல் விளங்குவதால் தானோ என்னவோ, அதனை அரச குடும்பத்தினரே 'ஷாகி பன்னீர்' என்ற உணவு வகையாகச் செய்து சாப்பிட்டனர். உடல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு அனைத்தும் நிறைந்த பன்னீர் தற்காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. அரச குடும்பத்தினர் உண்டு களித்ததாகக் கருதப்படும் 'ஷாகி பன்னீர்' உணவு வகையை மிக மிக சுலபமாக நாம் செய்யலாமா?


தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 6
பாதாம் பருப்பு - 6
பால் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்

வறுத்து அரைக்க:

ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1 சிறு துண்டு
ஷாகி ஜீரா - 1 டீ ஸ்பூன்

அலங்கரிக்க:

நெய் - 1 டீ ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு ஆறியதும் தோலை உரிக்கவும்.

* முந்திரிப் பருப்புகள், தோலுரித்த பாதாம் பருப்புகள் இரண்டையும் சிறிது பாலில் ஊற வைக்கவும்.

* வாணலியில் சிறிது வெண்ணையை போட்டு சிறு சதுரங்களாக நறுக்கிய பன்னீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும்.

* வறுத்து அரைக்க தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து மிக்சியில் போடவும்.

* பொடியாக அரிந்த வெங்காயத்தை வறுத்த மசாலாவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

* வாணலியில் மீதமுள்ள வெண்ணையை போட்டு அதில் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகுத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* மேற்சொன்ன கலவை நன்கு வதங்கியவுடன் குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பாலை வதங்கும் மசாலாக் கலவையில் ஊற்றவும்.

* பாலில் ஊற வைத்த முந்திரி-பாதாம் பருப்புகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

* அந்த விழுதை கொதிக்கும் பாலுடன் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு வறுத்த பன்னீர் துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து மேலும் ஒரு கொதிவிடவும்.

* நெய்யில் வறுத்த உலர் திராட்சை, 'பிரஷ் க்ரீம்', துருவிய சீஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு:

* கறுப்பு வண்ணத்துடன் இருக்கும் 'ஷாஹி ஜீரா' சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். 'ஷாஹி ஜீரா' கிடைக்காவிட்டால் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் சீரகத்தை உபயோகிக்கலாம்.

* 'பிரஷ் கிரீம்' துருவிய சீஸ் கிடைக்காவிட்டால் வீட்டில் உள்ள கடைந்த பாலேட்டைப் போட்டு அலங்கரிக்கலாம்.

No comments: