Sunday, May 1, 2011

திருச்சி - கஸ்டமா? கஷ்டமா?

இவ்வருட விடுமுறையில் தமிழ் நாட்டில் இறங்குமிடம் திருச்சியா? சென்னையா? என்ற வழக்கமான சிந்தனையில் இம்முறை திருச்சிக்கு செல்வது என்று வழக்கத்திற்கு மாறாக முடிவெடுத்தேன்.

தோஹா - கொழும்பு - சென்னையை விட, தோஹா - கொழும்பு - திருச்சிக்கு கட்டணம் கூடுதல் என்றாலும் குடும்பத்துடன் பயணிப்பதால், எனது உள்ளூர் வாகன பயண நேரத்தினை கருத்தில் கொண்டு திருச்சிக்கு பயணித்தேன்.

விடிகாலையில் விமானம் தரையை தொட்டதிலிருந்தே தடபுடலான வரவேற்புதான் போங்கள். சுங்க அதிகாரிகள் நாட்டிற்கு மிகவும் தேவையான கேள்விகள் கேட்டார்கள்.

போன முறை எப்போ வந்தீங்க? (பாஸ்போர்ட் கையில் தன் வைத்திருந்தும் நான் தேதி கூறிய பின்பு தான் திருப்தி அடைந்தார்)

தோஹா-வில் எங்கே வேலை செய்றீங்க? கம்பெனி எப்படி?

தோராயமா என்ன சம்பளம் வாங்கறீங்க?

அத்தோடு ஓவர் என நினைக்கையில்,

பெண்கள் அணிந்திருந்த ஒவ்வொரு நகைக்கும் ரசீது எங்கே என்று குடைய ஆரம்பித்தனர்.

இந்தாம்மா...இவ்வளவு நகையும் "உன்துதானா"? என என் மனைவியையும்,

புதிய ஸ்கேனர் மெஷின் வந்திருக்கு. அதனால பொட்டிக்குள்ள என்னன்ன ஐட்டங்க மறைச்சி வச்சிருக்கீங்கன்னு நீங்களே சொல்லிட்டா "மரியாதையா" இருக்கும் என என்னையும்.

அவர் குறிப்பிட்ட அந்த ஸ்கேனர், கார்டூனில் பேக் செய்திருந்த எனது சிறிய டேபிள் டைப் ரைட்டரை டி.வி.டி ப்ளேயராக காட்டியது போலும். கார்டூனின் மேல்புறத்தில் சாக்பீஸால் டி.வி.டி என கொட்டை எழுத்தில் உற்சாகமாக எழுதப்பட்டிருந்தது.

அது டி.வி.டி அல்ல என்று எவ்வளவு கூறியும் மறுத்துவிட்டதால் ("மேற்படி"யை வெட்ட எனக்கும் மனமில்லாததால்) இறுகக் கட்டிய முழு பெட்டியையும் திறந்து காட்டி நிரூபிக்க வேண்டி இருந்தது. வேதனை என்னவென்றால் அது டி.வி.டி அல்ல என்று தெரிந்தும் சிறிய ஒரு சலனமும் இன்றி அம்போவென விட்டு விட்டு அடுத்த பயணியை மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ஏன்யா...ஒரு ஃபார்ம் கூட சரியா ஃபில்லப் பண்ணத் தெரியல... நீ எல்லாம் எப்படி வெளிநாடு போன?? (என் பின்னால் யாரையோ காய்ச்சிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே, சிதறி கிடந்த எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக்கொண்டு மனம் வெறுத்து வெளியே வந்தேன்)

ஏமாளியாக தெரியும் பல பேரை சில்லறைக்காக, அல்லல் பட வைப்பதை அங்கே கண்கூடாக பார்க்க நேர்ந்தது.

என் மனதில் எழுந்த சில கேள்விகள்:
சுங்க பரிசோதனை சட்டத்தில் அணிந்திருக்கும் நகைகளுக்கு குறுக்கு விசாரணைகள் உண்டா? எனில் வரைமுறை என்ன?
எலக்ட்ரானிக்ஸ் கொண்டு வருவதில் தடை உண்டா? அதன் வரைமுறை என்ன?

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அதை செயல் படுத்த முனைவதற்குள் குறுகிய விடுப்பு கழிந்து விட தோஹா திரும்பி விட்டேன்.

சுங்க அதிகாரிகள், தங்கள் கடமைகளை மீறி மனம் புண்படும் விதத்தில் பயணிகளை நடத்துவது, அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? பயணிகளை அநாகரிகமாக இவ்வாறு நடத்துவதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஊரைப் பிரிந்து, உறவைப் பிரிந்து வாடி வெளிநாடு நாடு சென்று ரத்தத்தை வியர்வை வடிவில் சிந்தி உழைக்கும் பணத்தை, ஏதோ தங்கம் காய்த்த மரத்தை லேசாக உலுக்கி அள்ளி எடுத்து வருவது போல் நினைக்கிறார்கள்.

திருச்சி கஸ்டத்தின் கஷ்டம் தாங்க முடியாமல், திருச்சியிலிருந்து அருகில் உள்ள தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், சென்னையிலிருந்து மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கிறார்கள்.

பின்னர் விசாரித்ததில் பல பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிய முடிந்தது. உங்களுக்கு இது போல் அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும்.

-------------------
இது பரவாயில்லீங்க! இந்த "கஸ்டம்"ல எல்லாம் மாட்டி விழி பிதுங்கி வெளியே வந்து மூச்சு விட்டாக்கா ரோட்டோரம் வண்டியை (டாப் கேரியர்ல பொட்டி கட்டின வெளிநாட்டு பார்ட்டி வருதுடோய்...) ஓரங்கட்டும் காக்கிசட்டை போட்ட திருடர்களுக்கு வேற தனியா வெட்டனும்ல... என்றபோது எம் இழிநிலை புரிந்தது.

No comments: