Sunday, May 1, 2011

உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை

நவம்பர் மாத குளிர் நேரத்தில் அதிகாலை 7 மணிக்கு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் என்னை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். தன் பெருவிரலில் உள்ள காயத்திற்காக போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து டிரெஸ்ஸிங் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார் தனக்கு ஓர் முக்கிய அப்பாயிண்ட்மென்ட் 7.30 மணிக்கு உள்ளதால் விரைவில் சிகிச்சையளிக்கும் படி வேண்டினார்.




அவரின் அவசரத்தை புரிந்து கொண்ட நான் அதிகாலை நேரத்தில் வேறு நோயாளி இல்லாததாலும் அவரை இருக்கையில் அமரச் செய்த உடன் அவரின் காயத்தை பார்வையிட்டேன். அவரின் கட்டை அகற்றி புதிய கட்டை போட்டு கொண்டே இவ்வதிகாலை நேரத்தில் எந்த வி.ஐ.பியை பார்க்க போகின்றார் என்ற ஆச்சரியம் தாளாதவனாய் இக்கட்டு போட சிறிது தாமதமானால் பரவாயில்லை என்று கேட்ட போது நேரம் தவறி போக விரும்பவில்லை என்றும் சிகிச்சைக்கு தாமதமாகுமென்றால் மாலை வந்து கட்டு போட்டு கொள்வதாகவும் சொன்னார்.

ஆச்சரியம் அதிகரித்தவனாய் " இவ்வளவு அதிகாலையில் செல்கின்றீர்களே, ஒரு வேளை வேறு ஏதேனும் முக்கிய சிகிச்சைக்காக வேறு மருத்துவரை பார்க்க செல்கின்றீர்களா" என்று கேட்ட போது இல்லை என்று மறுத்து விட்டு மருத்துவமனையில் உள்ள தன் மனைவியை பார்த்து அவளுடன் அதிகாலை உணவை சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்றார். தன் மனைவி தினந்தோறும் சாப்பிடும் நேரத்திலேயே போய் விட வேண்டும் என்பதாலேயே அவசரப்படுவதாகவும் சொன்னார்.

முதிய வயதிலும் அவரின் மனைவி மேல் அவருக்கு உள்ள பாசத்தை வியந்தவனாக அவரின் மனைவியின் உடல் நிலை குறித்து விசாரித்தேன். அவரின் மனைவி சில காலமாகவே அல்ஜீமீர் ( கடந்த காலத்தை மறத்தல் இந்நோயின் அறிகுறியாகும்) நோயால் அவதிப்படுவதால் மருத்துவமனையில் சில காலமாகவே உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு வேளை தாமதமாக அவரின் மனைவியை சந்திக்க சென்றால் அவரின் மனைவி அதிருப்தி அடைவார்களோ என்று கேட்ட போது அல்ஜீமீர் நோயின் காரணத்தால் தன் மனைவிக்கு தன்னை யார் என்றே தெரியாது என்றும் கடந்த ஐந்து வருடத்தில் தன்னை நோக்கி எதுவும் கேட்டதில்லை என்றும் தெரிவித்தார்.

வியப்பின் உச்சிக்கே சென்ற நான் உங்களை யாரென்றே தெரியாத மனைவியை பார்க்க நீங்கள் தினந்தோறும் சரியான நேரத்துக்கு செல்கின்றீர்களா என்று கிண்டல் பொதிக்க கேட்ட போது அவர் என் முதுகை தட்டி சொன்னார் " அவளுக்கு என்னை யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளை யாரென்று தெரியும்".

கண்களில் வழிந்த நீரை துடைத்தவனாக இத்தகைய உண்மையான அன்புக்காக தானே உலகமே ஏங்கி கொண்டிருக்கிறது என்று நினைத்து கொண்டேன். ஆம் உண்மை அன்பு சட ரீதியான ஒன்றோ, கவர்ச்சிகரமான ஒன்றோ அல்ல. மாறாக தனக்கு கிடைப்பதை அதன் நிறை குறைகளோடு அப்படியே மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வது.

உலகின் மிக மகிழ்ச்சியான மனிதர்கள் உலகின் மதிப்பு வாய்ந்த பொருட்களை கொண்டவர்கள் அல்ல, மாறாக தங்களுக்கு கிடைத்த பொருட்களை மதிப்பு மிக்கதாக வடிவமைத்து கொண்டவர்கள் என்பது தான் உண்மை.

No comments: