Thursday, June 23, 2011

'பச்சைப் புரட்சி'க்கு விதை போட்ட விக்ரம்


நடிகர் விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23-வது நிர்வாகக்குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய விக்ரம் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியது :

" ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

இதற்காக 'பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதையடுத்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். இதன் மூலம் குடிசைப்பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

எனவே 'பச்சைப்புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன்.

இத்திட்டத்திற்காக எனது நண்பர்களான விஜய், அஜீத் என பலரிடம் பேச இருக்கிறேன். அது மட்டுமல்லாது இனி எனது படங்களில்  இது சம்பந்தமான விளம்பரங்களும் இடம்பெறும்.

விஜய், அஜீத்துடன் இணைந்து இது சம்பந்தமாக ஒரு வீடியோ ஒன்றை தயார் செய்ய திட்டமும் இருக்கிறது."

சமூக நலப்பணிகளில் எல்லாம் ஈடுபடுகீறர்களே அரசியலுக்கு அஸ்திவாராமா என்ற கேள்விக்கு " எதுவும் நடக்கலாம். ஆனால் நான் அரசியலுக்கு வருவது கஷ்டம்.. ஏனென்றால் எனக்கு பேச வராது "  என்ற பதிலளித்தார்.

நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் 'பிரென்ச்' தாடி வைத்தால் அவர்களும் 'பிரென்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.

No comments: